Type Here to Get Search Results !

சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், எல்லைப்பகுதியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் இந்தியா

latest tamil news

லடாக்கில், கல்வான் பகுதியில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், எல்லைப்பகுதியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

எல்லை சாலைகள் அமைப்பு( பிஆர்ஓ) மூலம் எல்லை பகுதியில் தொலைதொடர்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஜார்க்கண்டை சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாங்காங் சோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டத்திற்கும், தர்புக் - ஷயோக் - தவுலட் பெக் சாலையை இணைக்கும் சாலையை இணைக்கும் திட்டத்திற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், சீனாவின் அழுத்தத்தை கண்டு , லடாக்கின் கிழக்கு பகுதியில் திட்டங்களை நிறுத்துவது இல்லை என இந்தியா ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

இதற்காக, கடந்த மே 22ம் தேதி, மத்திய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில், ரயில்வே துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், நாட்டின் எல்லை பகுதியில் சாலை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஜார்க்கண்டில் இருந்து காஷ்மீர், லடாக் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 11,800 தொழிலாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தது. அதில், லடாக்கில் நடக்கும் பணிகளுக்கு, 11,815 பேரில் 8 ஆயிரம் பேர் தேவை என பிஆர்ஓ கூறியிருந்தது. எஞ்சியவர்கள், மற்ற மாநிலங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

காஷ்மீர் மாநில தொழிலாளர் நல வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, ஜார்க்கண்டில் இருந்து தொழிலாளர்கள் வந்தது பற்றி தங்களுக்கு தெரியாது. வெளிமாநில தொழிலாளர்கள் வருகை மற்றும் இங்கிருந்து செல்வது குறித்து பதிவு செய்யும் முறை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தான் துவங்கியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், 48,681 ம் பேர் சொந்த ஊர் சென்றனர். அதில் 46 ஆயிரம் பேர் ஜம்முவில் இருந்து சென்றுள்ளனர். 2 ஆயிரம் பேர் காஷ்மீரின் மற்ற பகுதியில் இருந்து சென்றனர். உதம்பூர் - ஜம்முவில் இருந்து டில்லிக்கு 33 ஷராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

உதம்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், பிஆர்ஓ ஏற்பாட்டின்படி சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வந்துள்ளனர். அதில், சிலர் லே- மணலி சாலை வழியாக வந்துள்ளனர். கடந்த 10 நாளுக்கு முன்பு கடைசியாக வந்த ரயிலில் 1,600 பேர் வந்தனர். அதில் எத்தனை பேர் லடாக்கை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது பற்றியும், பல மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்பதும் தெரியாது என்றார்.

கருத்து வேறுபாடு

சாலையில் நடக்கும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் அழைத்து வரப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜார்க்கண்ட் மற்றும் பிஆர்ஓ இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அழைத்து வருவது தடை பட்டது. தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்களின் வங்கிகணக்கில் போட்டது. ஆனால், இந்த இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், தொழிலாளர்களின் வங்கி ஏடிஎம் கார்டுகளை வாங்கி வைத்து கொண்டு 30 சதவீத பணத்தை கமிஷனாக பெற்று கொண்டனர். இதனையடுத்து, தொழிலாளர்களை மாநில அரசுடன் புரிந்துணர்வு ஓப்பந்தம் போட்டு, அழைத்து செல்லும்படி ஜார்க்கண்ட் மாநில அரசு கூறியது. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவது தடுக்கப்படும். இதனால், தொழிலாளர்களை அழைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. லடாக்கில் நடக்கும் உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்கு உடனடியாக 8 ஆயிரம் தொழிலாளர்களை அழைத்து வரும்படி பாதுகாப்பு அமைச்சகம், பிஆர்ஓவை கூறியிருந்தது. ஜார்க்கண்ட் மாநில அரசின் எதிர்ப்பு காரணமாக இது நடக்க முடியாமல் போனது.

இதனையடுத்து, மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுவதால், 2021 ம் ஆண்டு முதல், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதாகவும், , சம்பளத்தை உயர்த்தி கொடுக்கப்படும். தொழிலாளர்களுக்கு ரூ.15 லட்சம் வரை காப்பீடு செய்யப்படும் என பிஆர்ஓ, அமைப்பு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் உறுதியளித்தது.தொழிலாளர்களின் தகுதிக்கு ஏற்ப மாதத்திற்கு, ரூ.15,900 முதல் ரூ.29 ஆயிரம் வரை ஜூன் 10 முதல் சம்பளம் கிடைத்தது. இது இடைத்தரகர்கள் மூலம் கிடைத்த சம்பளத்தை விட அதிகம் ஆகும்.

இதனையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன் கூறும் போது, தேசத்தின் பாதுகாப்பே நமக்கு முக்கியத்துவம். அதேநேரத்தில், தேசத்திற்காக பணியாற்றும் நமது தொழிலாளர்களின் கவுரவம் மற்றும் உரிமையை பாதுகாக்க வேண்டும். நமது தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம். அவர்கள் தேசத்திற்காக பணியாற்றுவதுடன் ம நாட்டின் எல்லையில் பணியாற்ற அவர்கள் விரும்புகின்றனர். நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்களை அனுப்பி வைக்க தயார். அதேநேரத்தில், அவர்களின் மதிப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றிற்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது எனக்கூறி, அடுத்து வரும் ஆண்டுகளில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பு, சம்பளம், தங்கும் வசதி, ரேசன், துணி ஆகியவை ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்தது. இதனையடுத்து, மாநில அரசு அனுமதி அளித்ததும், தொழிலாளர்கள் சாலை திட்ட பணிகளுக்கு சென்றனர்.ஜார்க்கண்ட்டின் சாந்தல் பர்கனாவை சேர்ந்தவர்கள், எல்லையில் சாலை அமைக்கும் பணிகளில் 1970 ம் ஆண்டு முதல் முன்னணியில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

அந்தோணி ஒப்புதல்

எல்லை பகுதிகளை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், லடாக்கில் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில், மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், எல்லை பகுதிகளை மேம்படுத்த காங்கிரஸ் ஆட்சியின் போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை கடந்த 2013ம் ஆண்டு செப். 6 ல் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அந்தோணி ஒப்பு கொண்டு, லோக்சபாவில் பேசியதாவது: இந்தியாவுடன் ஒப்பிடும் போது, எல்லை பகுதிகளில் உள்கட்டமைப்புகளை சீனா முன்னணியில் உள்ளது. அவர்களின் உள்கட்டமைப்பு வசதிகள், இந்தியாவை விட உயர்ந்ததாக உள்ளது. இதனை நாம் பார்வையிட்டு தான் வருகிறோம். அதுவும் வரலாறு தான். அதில் என்ன உள்ளது. சுதந்திர இந்தியாவுக்கு என பல ஆண்டுகளாக ஒரு கொள்கை உள்ளது. அதில் பாதுகாப்பு என்பது எல்லை பகுதிகளை மேம்படுத்துவது கிடையாது. மேம்படுத்தப்பட்ட எல்லைகளை விட, மோசமாக உள்ள எல்லைகள் தான் சிறந்தது. இதனால், எல்லை பகுதியில் சாலை அல்லது விமானப்படை தளங்கள் அமைக்கப்படவில்லை. ஆனால், சீனா தனது எல்லைப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி வருகிறது. இதனால், அவர்கள் நம்மை விட சிறந்த வசதிகளை செய்துள்ளனர். நம்முடன் ஒப்பிடும் போது, எல்லையில் உள்கட்டமைப்பு அடிப்படையில் நம்மை விட சீனா முன்னால் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.