
ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2:30 மணிககுள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் கூறியதாவது: லட்சகணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒரு மாதம் தள்ளி வைக்காமல் ஏன் அவசரம் காட்டப்படுகிறது. மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், போலீசார், வருவாய்த்துறையினரை இக்கட்டுக்கு ஆளாக்குவது ஏன்? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது.
ஊரடங்கு காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன உள்ளது என நினைக்கிறீர்கள்? பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறுவீர்களா? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், முதல்வர் - அமைச்சர் சந்தித்தது தொடர்பான நிலவரங்களை விளக்க வேண்டும். என்ன முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அரசு தலைமை வழக்கறிஞர் இன்று ஆஜராக முடியாது என்பதால், வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஜூன் 15ல் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது.
கொரோனா பரவல் குறைந்த பின் தான் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2:30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடையை திறப்பது போல், பத்தாம் வகுப்பு தேர்வு கிடையாது. இரண்டும் வெவ்வேறானவை. பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.


AthibAn Tv