
இந்திய, சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாடுகளுக்கிடையே மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரச்னை நீடித்துவருகிறது. அதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நீடித்துவருகிறது. எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சமாதான முடிவுகள் எட்டப்படவில்லை. இந்தநிலையில், கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன.
சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராணுவத் தளபதி எம்.எம்.நாரவானே, ‘சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. சீன தரப்புடன் தொடர்ச்சியான உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் மூலம், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 10-15 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவை எல்லாம், ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மிக நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு காரணமாகவே நடந்துள்ளது.
பெரும்பாலான நடவடிக்கைகள் உள்ளூர் மக்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. போர்க்குணம் மற்றும் பயங்கரவாதத்தால் மக்கள் முற்றிலும் வெறுத்துப் போயிருப்பதையே இது காட்டுகிறது. மேலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்தார்.


AthibAn Tv