
உங்கள் பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று(ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சத்குரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகம், கடந்த சில மாதங்களாக கொரோனா எனும் மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. நம் தலைமுறையில் சந்திக்கும் மிகப்பெரும் சவால் இது. நம் சுற்றுப்புறம் இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருக்கும் போது, நமது உள்நிலை சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
நெருக்கடியான காலங்களில் உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்கள் நெருக்கடிக்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கு பிந்தைய காலத்திலும் மனிதர்கள் எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகள் தான் சவாலானவை. இதற்கு யோகா ஒன்றே சிறந்த வழி.
யோகா தொடர்ச்சியான உடற்பயிற்சி இல்லை. அதில் உடல் சார்ந்த அம்சங்கள் இருந்தாலும், எது நீங்கள், எது நீங்கள் இல்லை என்பதை வழிப்புணர்வு மூலம் தெளிவாக உணர முடியும். உங்கள் பிரச்னைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை யோகா அதிகரிக்கும். யோகா பயிற்சி, உங்கள் உடல், மன செயல்பாடுகளுக்கு இடையே ஒரு இடைவெளியே உருவாக்கும். நாடும், மக்களும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதற்கு உடலில் வலுவும், மனதில் உறுதியும், உணர்ச்சியில் சமநிலையும் முக்கியம்.
சில யோகா பயிற்சிகளை செய்வதால் நாம் இதை செய்து காட்ட முடியும். தன்னிலை மாற்றத்துக்கான ஒரு கருவி யோகா. மதம், தத்துவம், கருத்தியலை கடந்த தொழில்நுட்பம். யோகா பயிற்சி மூலம் தன்னிலை மாற்றம் அடைந்து. அன்பான, ஆனந்தமான மனிதர்களாக மாற வேண்டும் என்பது என் விருப்பம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


AthibAn Tv