Type Here to Get Search Results !

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தரப்பிற்கு பலத்த அடி பலர் பலியாகி உள்ளனர்.

இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்கள் ...

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா மோதல் சம்பவத்தில் சீன தரப்பில் 350 வீரர்களை, இந்திய தரப்பில் '16 பிஹாரி ரெஜிமென்ட் படை'யின் 100 வீரர்கள் தீரத்துடன் எதிர்த்து வீழ்த்தி, சீன ஆக்கிரமிப்புகளை அகற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இச்சம்பவம் நடப்பதற்கு முன், ஷ்யோக், கல்வான் நதிக்கரையில் உள்ள ஜாப் லடாக் பகுதியில் உள்ள ஓய் சந்திப்பில், சீன - இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அமைத்திருந்த அறிவிப்பு பலகையை நீக்க இந்திய ராணுவம் கோரியுள்ளது. இதனையடுத்து 16 பிஹாரி ரெஜிமென்ட் படையின் சிறிய குழு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று சீன ராணுவத்திடம், அதனை அகற்றும் படி வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பின் இந்திய வீரர்கள் அங்கிருந்து திரும்பி உள்ளனர்.

இதனையடுத்து ராணுவத்தின் 50 வீரர்களும், '16 பிஹாரி ரெஜிமென்ட் படை'யின் 50 வீரர்களும் சீன ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்திற்கு மீண்டும் வந்துள்ளனர். வெறும் 10 - 15 சீன வீரர்கள் மட்டுமே இருந்த இடத்தில், அச்சமயம் சுமார் 300 பேர் குவிந்துள்ளனர். தொடர்ந்து இந்திய எல்லைக்குள் இருந்து வெளியேறும்படி, சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வாக்குவாதம் முற்றியுள்ளது. தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கியுள்ளனர். முன்னதாகவே தாக்குதலுக்கு திட்டமிட்ட சீன வீரர்கள், தயாராக வைத்திருந்த இரும்பு ராடு, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அவர்களின் முதல் தாக்குதல், ஹவில்தார் பழனி மீதும், '16 பிஹாரி ரெஜிமென்ட்' கமாண்டிங் அதிகாரி மீதும் தான் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த இந்திய வீரர்கள், சீன ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். சுமார் 350 சீன வீரர்களை, வெறும் 100 இந்திய வீரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். இந்திய வீரர்களும் கற்களை கொண்டு தாக்கி, அவர்களை நிலை குலைய வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 மணி நேரம் நடந்த சண்டையில், சீன தரப்பிற்கு பலத்த அடி விழுந்துள்ளது. பலர் பலியாகி உள்ளனர். அசராத இந்திய வீரர்கள், குடில்கள், பிளக்ஸ்கள், பலகைகளை பிடிங்கி அப்புறப்படுத்தி உள்ளனர். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.