
''அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார்.
மத்தியில் இரண்டாவது முறையாக, பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஓராண்டில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை, மக்களிடம் கொண்டு செல்வதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், 'காணொளி பேரணி' நடத்தப்படுகிறது. தினமும் ஒருவர், சமூக வலைதளங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே உரையாற்றுகின்றனர்.
நேற்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இந்தியா அமைதியான நாடு; அமைதிக்காக பாடுபடுகிற, அமைதியை விரும்புகிற நாடு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவித்தால், அனுமதிக்க மாட்டோம்.நாட்டின் எல்லையை பாதுகாக்க, ஆயுதங்களை உபயோகப்படுத்த, ராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆறு ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள், வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளில், 11 கோடி கழிப்பறைகள், நாடு முழுவதும், துாய்மைப் பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளில், ஏழைகளுக்கு, எட்டு கோடி காஸ் இணைப்பு உட்பட, 13 கோடி காஸ் இணைப்பு கொடுத்துள்ளோம்.
விறகில் சமைக்கும்போது, புகையில் சிரமப்பட்டனர். நுரையீரல் பாதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு காலத்தில், விறகில் சமைத்திருந்தால், பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பர்.புதிதாக, 38 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. வயது வந்தோர் அனைவரும், வங்கி கணக்கு துவக்கி உள்ளனர். இதனால், உடனடியாக விவசாயிகளுக்கு, அவர்கள் வங்கி கணக்கில், 2,000 ரூபாய் செலுத்த முடிகிறது.
'ஆயுஸ்மான் பாரத்' திட்டத்தின் கீழ், 15 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். சரியான நேரத்தில், ஊரடங்கை பல்வேறு கட்டங்களாக, பிரதமர் அறிவித்ததால், கொரானோ நோய் அதிக அளவில் பரவுவதை, தடுக்க முடிந்தது. மேலும், ஊரடங்கு காலத்தில், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.
சென்னை, மும்பை போன்ற நகரங்களில், நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்.


AthibAn Tv