''காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும்'' என அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அவர் தேர்தல் பிரசாரத்தையொட்டி அமெரிக்க முஸ்லிம் சமூகத்தினரிடம் தன் கொள்கை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியாக போராடுவோருக்கு தடை விதிப்பது அரசு கொள்கையை எதிர்ப்போரை அடக்குவது இணைய வசதியை முடக்குவது அல்லது அதன் வேகத்தை குறைப்பது போன்றவை ஜனநாயகத்தை பலவீனமாக்கி விடும். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றன.இது பல இனம் மதம் மொழி பேசும் மக்களை கொண்ட இந்தியாவின் பாரம்பரிய மதச் சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜோ பிடன் அறிக்கைக்கு அமெரிக்க ஹிந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'சீனாவின் உய்கர் முஸ்லிம்கள் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையுடன் காஷ்மீர் முஸ்லிம்களை இணைத்து ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிக்கை தவறு; அதை திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்க ஹிந்துக்கள் குறித்தும் அறிக்கை வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோ பிடன் ஆதரவாளரும் அவரது தேர்தல் பிரசார நிதிக் குழு உறுப்பினருமான அஜய் ஜெயின் புடோரியா கூறியதாவது: ஜோ பிடன் தேர்தல் பிரசார குழுக்களில் உள்ள சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாக அறிக்கையில் காஷ்மீர் குறித்து தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோ பிடன் இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை காஷ்மீரில் சிறுபான்மை ஹிந்துக்கள் படும் அவதி உள்ளிட்ட பிரச்னைகளை நன்றாக புரிந்து வைத்துள்ளார். அவர் அமெரிக்க துணை அதிபராக இருந்த போது இந்தியா உடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட பூரண ஆதரவளித்தார். குடியுரிமை திருத்த சட்டம் குடிமக்கள் பதிவேடு ஆகிய சீர்திருத்த்தங்கள் வரவேற்கத்தக்கவை. இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv