மே முதல் வாரத்தில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்ட இடமான லடாக்கின் பங்கோங் ஏரியிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சீன விமான தளம் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு, போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.
சில உளவு பிரிவு அமைப்பின் ஆய்வாளர்கள் திபெத்தில் உள்ள நகரி குன்சா விமான தளத்தின் செயற்கைக் கோள் படங்களை வெளியிட்டு ஒப்பிட்டுள்ளனர். இந்த விமான தளம் ராணுவ மற்றும் குடிமக்கள் என இரட்டை பயன்பாட்டுக்கானது. உலகின் மிக உயரமான விமான தளமான இது, 14,022 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவ்விமான தளத்தின் முதல் படம் ஏப்ரல் 6-ல் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது படம், கடந்த வாரம் 21-ல் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எடுக்கப்பட்ட படத்தில், போர் விமானங்களை நிலைநிறுத்த இரண்டாம் நிலை ஓடுபாதையை சேர்க்கும் கட்டுமானங்களை காட்டுகிறது. மூன்றாவது படத்தில் சீன விமானப்படையின் ஜே -11 அல்லது ஜே -16 போன்று தோற்றமளிக்கும் நான்கு போர் விமானங்கள் ஓடுபாதையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் ஜே -11 மற்றும் ஜே -16 ஆகியவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட வகைகள் ஆகும். இந்திய விமானப்படையின் சுகோய் 30 எம்.கே.ஐயின் திறன்களுடன் இவை பரவலாக பொருந்தும். இன்னும் சில வாரங்களில் இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் வர உள்ளது. அதுவரை சக்தி வாய்ந்த போர் விமானமாக சுகோய் 30 எம்.கே.ஐ விளங்கும்.

இந்த தளத்தில் சீனா போர் விமானங்களை பயன்படுத்துவது முதன் முதலில் டிசம்பர் 2019-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது வெளியிடப்பட்ட நெருக்கமான படங்கள், எந்த வகை போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடையாளம் காண உதவுகின்றன. உயரமான விமான தளம் என்பதால் சீன போர் விமானங்கள் குறைவான போர் கருவிகளையும், எரிபொருட்களையும் மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதே சமயம், இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர் விமானங்கள் சீன விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களை விட நீண்ட நேரம் பறக்க முடியும் என்கின்றனர் விமான படையினர்.
மே 5-ம் தேதி லடாக் அருகே இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்த இரு தரப்பினரிடையேயான மோதலுக்கு பின் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. பல ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 1999 கார்கிலுக்கு பிறகு இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள மோசமான பதற்றம் என இதனை ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மே 5-ம் தேதி லடாக் அருகே இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்த இரு தரப்பினரிடையேயான மோதலுக்கு பின் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. பல ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 1999 கார்கிலுக்கு பிறகு இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள மோசமான பதற்றம் என இதனை ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.



AthibAn Tv